தங்க நகை வாங்கும் போது காப்பருக்கும் சேர்த்து தங்கம் விலை போடப்படுகிறதா? உண்மை என்ன தெரியுமா?
தங்க நகை வாங்கும் போது காப்பருக்கும் சேர்த்து தங்கம் விலை போடப்படுகிறதா? உண்மை என்ன தெரியுமா?
தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளில் நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. ஒரு பவுன் தங்கம் விலை 58 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை ஆகிறது. ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரம் என எல்லாவற்றையும் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் வாங்க 66 ஆயிரத்திற்கு மேல் ஆகிறது. தங்கத்தில் ஆபரண நகைகள் செய்ய காப்பர் சேர்க்கப்படும் நிலையில், அதற்கும் ஏன் தங்கத்தின் விலை போடுகிறார்கள் என்ற சந்தேகம் இருக்கும். அதற்கான பதிலை பார்ப்போம்..
தங்கம் என்பது உலகம் முழுவதும் உள்ள நாடுகளால் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இந்த உலகில் எங்கு என்ன பிரச்சனை என்றாலும், நாடுகள் முதலில் ஓடிப்போய் வாங்கிவைப்பது தங்கத்தை தான்.. தங்கம் என்பது நகை ஆபரணம் என்பதை தாண்டி, உலகப்பொருளாதாரத்தையே தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. உலகினை அணு ஆயுதமோ, பணமோ பொருளாதாரத்தை தீர்மானிக்கவில்லை... தங்கம் தான் இந்த உலகில் ஒவ்வொரு நாடுகளின் பொருளாதார வலிமையை தீர்மானிக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை தங்கம் வாங்குவது என்பது கலாச்சாரம் சார்ந்த ஒன்று. தங்கம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் பெற்றோர் சேர்த்து வைக்கும் சீதனமாக பார்க்கப்படுகிறது. தங்க நகை என்ன விலை என்றாலும் நிச்சயம் மக்கள் வாங்குவார்கள், இதுதான் நிஜம்.
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் வரை வேகமாக உயர்ந்து வந்த தங்கத்தின் மீதான சுங்கவரியை, மத்திய அரசு பட்ஜெட்டில் குறைத்தது. இதன் காரணமாக தங்கம் விலை அன்றைய நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது. அதன் பின்னரும் விலை குறையத் தொடங்கியது. இதனால் ஒரு பவுன் ரூ.51 கீழ் வந்தது. ஆனால் மேலும் குறையவில்லை.. அமெரிக்க பெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதால், தங்கம் விலை மின்னல் வேகத்தில் மீண்டும் உயரத்தொடங்கியது. இதன் காரணமாக தங்கம் விலை சுமார் 59000 என்கிற அளவில் ஒரு கட்டத்தில் உயர்ந்தது.
ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற காரணத்தால் தற்காலிகமாக தங்கம் விலை சட்டென சரிந்தது. 55 ஆயிரம் என்கிற அளவில் வந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரு பவுன் ஆபரண தங்கம் இன்றைக்கு 58,280ஆக இருக்கிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 7,285 ரூபாய் ஆக உள்ளது. நேற்றை ஒப்பிடும் போது இன்று ஒரு நாளில் மட்டும் கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. பவுனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் விலையை பொறுத்தவரை பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும். தங்கம் என்பது காப்பர் கலந்து தான் ஆபரண நகையாக தயாரிக்கப்படுகிறது.. ஆனால் ஏன் காப்பருக்கும் சேர்த்து தங்கம் விலை வாங்குகிறார்கள் என்று நினைப்பார்கள்.
உண்மையில் சுத்த தங்கத்தை வைத்து எந்த ஆபரணமும் செய்ய முடியாது. அதில் செம்பு கலந்து தான் தங்கம் தயாரிக்க முடியும்.இதபற்றி நகை வியாபாரி கூறிய தகவலை பார்ப்போம்.. காப்பருக்கும் சேர்த்து யாரும் தங்கம் விலை போடுவது இல்லை.. பியூர் கோல்டு என்பது 24 கேரட் தங்கம் ஆகும். சுத்த தங்கத்தில் ஆபரணம் செய்ய முடியாது. அதற்கு அவ்வளவு பெரிய வலிமை தங்கத்திற்கு இருக்காது..
எனவே அதனுடன் காப்பரை சேர்த்தால் தான் தங்க நகை செய்ய முடியும்.. அந்த காப்பரை எந்த அளவிற்கு சேர்க்கிறோம் என்பதை பொறுத்து தான், 22 கேரட், 18 கேரட், 15 கேரட் என்று சொல்கிறோம். அதாவது என்னவென்றால், 100 சதவீதம் தங்கம் இருக்கும் இடத்தில் 91.6 சதவீதம் தங்கத்தை வைத்து மீதம் 8.4 சதவீதம் காப்பரை சேர்த்தால் அதனை 22 கேரட் தங்க நகை என்று அழைக்கிறோம்... கடைகளில் தற்போது விற்கப்படும் நகைகளில் பெரும்பாலும் 22 கேரட் தங்க நகைகள் தான்.. தங்க நகைகளில் 8.4 சதவீதம் காப்பரை சேர்த்துள்ள நிலையில் எதற்காக காப்பருக்கும் தங்க நகைக்கான ரேட்டை போடுகிறார்கள் என்ற கேள்வி இருக்கும்..
இன்றைக்கு 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் 7947 ரூபாய் ஆகவும், 8 கிராம் சுத்த தங்கம் விலை 63,576 ரூபாய் ஆகவும் உள்ளது. இதில் 22 கேரட் தங்கம் விலை என்பது ஒரு கிராம் 7,285 ஆகவே உள்ளது. கிட்டத்தட்ட ஒரு கிராம் சுத்த தங்கத்துடன் ஒப்பிடும் போது 22 கேரட் தங்கம் 662 ரூபாய் கிராமுக்கு குறைவாக உள்ளது. காப்பர் சேர்ப்பதால் தான், 7947 ரூபாய் ஆக உள்ள தங்கம், 7,285 ரூபாய்க்கு தரப்படுகிறது.. எந்த கடையிலும் காப்பருக்கு தங்கம் விலை வசூலிக்கப்படுவது இல்லை' என்று கூறினார்.
குறிச்சொற்கள்: