பொடுதலைக் கீரை
பொடுதலைக் கீரை
பொடுதலைக்கீரை பார்ப்பதற்கு திப்பிலிப் போல இருக்கும். அனைத்து வகையான மூல நோய்களையும் குணப்படுத்தக் கூடியது. சர்க்கரை நோய், கல்லீரல் நோய்கள் நுரையீரல் சார்ந்த நோய்கள், உடல் பலவீனம், உடலில் உண்டாகும் கட்டிகள், வீக்கம் போன்றவற்றையும் குணப்படுத்தும்.
இதன் சுபாவம் சூடு அதிகமாய் உண்டால் சூட்டை கிளப்பிவிடும். அளவோடு உண்டால் மருந்தாக நமக்கு உதவும். கிராமங்களில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். சத்துக்கள் அதிகமில்லாவிட்டாலும் பல நோய்களை இக்கீரை குணப்படுத்துகிறது.
இது தரையோடு படர்ந்திருக்கும் ஆறு, குளம் குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பெரும்பாலானோர் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது தென்னிந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது. தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
உடலில் எந்த வகையான பாதிப்பு ஏற்பட்டாலும் தலைவலி தான் முதலில் உருவாகும். இதில் மன அழுத்தம் உருவானால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். இந்த தலைவலி பல வகையில் அல்லல்படுத்தும். இவர்கள் பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.
இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும். உடல் சூட்டால் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக உருவாகும்.
இதனை அக்கி என்பர். இது உடலில் அதிக எரிச்சலை உண்டாக்கும். பாதிக்கப்பட்டவர்கள், பொடுதலையை நன்கு மைபோல அரைத்து அக்கியின் கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள் விரைவில் ஆறும். பெண்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோயில் வெள்ளைப்படுதலும் ஒன்று.
இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும் அல்லது காலை, மாலை இரு வேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். இக்காலத்தில் ஆண், பெண் பாரபட்சமின்றி பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும். தேங்காய் எண்ணெய்யில் பொடுதலை இலைகளை போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெய்யை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். சிலருக்கு வாயுவினாலோ அல்லது ஏதேனும் அடிப்பட்டாலோ விரைப்பையில் வீக்கம் உண்டாகும்.
இவர்கள் பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான பகுதியில் பற்று போட்டால் விரை வீக்கம் குறையும். சில பெண்களுக்கு கருப்பை வலுவில்லாமல் இருப்பதால் கருச்சிதைவு உண்டாகும். இவர்கள் பொடுதலையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கருப்பை வலுப்பெறும்.
கை, கால் கணுக்களில் வீக்கம் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து வீக்கமுள்ள பகுதியில் பூசி வந்தால் கை, கால் வீக்கம் குறையும். பலவித நோய்களையும் போக்கும் பொடுதலையை அடிக்கடி உண்ணாமல் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.
நூறு கிராம் பொடுதலை இலையை அரை டம்ளர் நீரிலிட்டு காய்ச்சி 1/4பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை மாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும். இக்கஷாயத்துடன் வால்மிளகு சூரணம் சேர்த்து குடித்துவர சிறுநீரக நீர்த்தாரைப்புண், அதனால் ஏற்படும் வெள்ளைப் படுதல் குணமாகும்.
முடி இருப்பவர்களுக்கு எல்லாம் பொடுகு ஒரு பெரும் பிரச்சனையாகும். பொடுகு உள்ளவர்களுக்கு முடி உதிரும். எத்தனை தைலங்கள் தேய்த்தாலும் குணமாகாது. பொடுதலை 150 கிராம், தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம், வெந்தயம் 50 கிராம், மூன்றையும் இடித்து இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு அதில் மேலே உள்ளவற்றை கலந்து சிறு தீயில் எரிக்கவும்.
நீர் சுண்டி தீயாமல் மிதக்கும் பக்குவத்தில் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும், இதை தினமும், தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில் தேய்த்து தலைவாரிக் கொள்ள வேண்டும்.
பொடுகுக்கு மேற்பூச்சு மட்டும் முழு பலனளிக்காது. உள்ளுக்கும் பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கி, புளி, உப்பு, மிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட பொடுகு குணமாகும். இதற்கு பூற்சாதம், பூஞ்சாதம், பொடசிரிசம், நாகசிங்கு, ரசாயனி சையவம், தோசாக்கினி, குன்மனாசணி, பொடுதலை என பல பெயர்களும் உண்டு.
குறிச்சொற்கள்: