நம்ம நாட்டு மருந்து சிறியா நங்கை
சீறிய நாகம் கட்டழியும்
சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும் என்பர். வீடுகளின் வேலியில் சிறியா நங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்பு எட்டிப் பார்க்காது. அதாவது சிறியா நங்கை இலை மீது பரவி வரும் காற்று பாம்பின் மீது பட்டால், அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால், பாம்பால் செயல்பட முடியாமல் போய்விடுமாம். பாம்புக்கடி, தேள்கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். இதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும்.
சிறியா நங்கை, பெரியா நங்கை
இதில், சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு.
- இதில் கசப்புத்தன்மை அதிகமாக இருக்கும்.
- இதன் இலை மிளகாய் இலைகளை போன்று இருக்கும்.
- இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும். அழகைக் கொடுக்கும்.
- நீரிழிவுக்கு அருமையான மருந்து.
பாம்புக்கும், கீரிக்கும் சண்டை ஏற்பட்டு பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக் கொள்ளும் என்பர்.
மருத்துவ குணம்
சிறியா நங்கையின் இலை மற்றும் வேர்ப்பகுதிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.
- அக்காலத்தில் வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியா நங்கை செடியின் வேரை, வாயின் கடவாய் ஒரத்தில் கடித்துக் கொண்டு செல்வார்கள்.
- அவ்வாறு செல்லும்போது வேறு எந்த விஷப்பூச்சி கடித்தாலும் அவர்களை தாக்காது. தோல் நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது.
- ஆனால் பத்தியத்திற்கு கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது.
- நீரிழிவு நோய்க்கும், அலர்ஜிக்கும் சிறியா நங்கையைப் பயன் படுத்துகிறார்கள்.
- மஞ்சள் காமாலை, மலேரியா மற்றும் விஷ காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
- தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
- சிறியா நங்கை இலைகளை, எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
- சிறியா நங்கை இலைப்பொடி, நெல்லி முள்ளிப்பொடி, நாவல் கொட்டைப்பொடி, வெந்தயப் பொடி, சிறுகுறிஞ்சான் இலைப் பொடி இவை ஐந்து வகைகளையும் ஒரே எடை அளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- இதனை காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்.
குறிச்சொற்கள்: